My blogs, Brags all here.

Thursday, August 2, 2012

மாமல்லபுர... புத்தன்!

29-07-2012, ஞாயிறு.

என்றும் போலவே இன்றும் விடியும் வேளையில் விழித்தே இருந்தேன். முன்தினம் இரவு 10 மணியளவில், திண்டுக்கல்லில் இருந்து பேருந்தில் ஏறிய நான் எனது இருக்கையைத் தேடிக் கொண்டு இருக்கையிலேயே... இருக்கைகள் என் கவனத்தை இழுக்க முயன்றது. சற்றும் எதிர்பாராத விதமாக நான் எதிரில் பார்த்தது எனது பள்ளித் தோழன் நிசாந்த் அசோக் (ஆம் நிசாந்த் அசோக்... அப்படிதான் அவனது பெயர் முகநூலில் காணப்படும்!) நிசாந்த் என்னைவிட ஒரு வருடம் இளையவன். நான் மூன்றாம் வகுப்பு சேர்ந்த முதலில் இருந்தே எனக்கு பழக்கப்பட்டவன் இருப்பினும் அதிகமாக நாங்கள் உரையாடியது இல்லை. உண்மையில் எங்களது நட்பு, "நலம், நலமறிய ஆவல். வாழ்த்துக்கள், வணக்கம்." என்னும் அளவை அதிமாக தாண்டியதில்லை. பொதுவாக உயரிய தொழில்நுட்பக் கருவிகள் எதையும் உபயோகிக்காத எனது கைகளில் வழக்கத்துக்கு மாறாக எனது அண்ணனின் உள்ளங்கை கணினி விளையாடிக் கொண்டிருந்தது. எனது தோழர்கள் எழில், புவனா, கிறிஸ்டி, செந்தில், ஶிவ் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். சற்று நேர கட்டாய அணுபவ பரிமாற்றத்திற்கு பின்பு "சரி அண்ணா, நான் தூங்குறேன்" என நிசாந்த் தன் இருக்கைக்கு சென்றான். திருச்சி கடந்து சற்று நேரத்துக்கெல்லாம் சயனம் தொடங்கியது. பேருந்து பயணத்தில் சயனம் என்பது எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று. பேருந்து பெரம்பலூர் அருகே செல்லுகையில் விழித்தேன். ஓட்டுனரைத் தவிர அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வழியெல்லாம் விழி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன். உண்மையில் அந்த பயணத்தின் போது என் மனம் மட்டும் பங்களாதேசம், காஶ்மீர், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ஈரான் என என் கதைக்களங்களுக்கு சென்று வந்தது. மீனம்பாக்கம் வந்ததும் நிசாந்திடம் விடைபெற்றுக்கொண்டு கத்திப்பாரா பாலத்தில் இறங்கினேன். என்னேரமும் பெட்ரோல் விலையேற்றத்தையே காரணம் சொல்லி குதிரை விலையில் ஒரு குறும்பயணத்தை தரும் சென்னை ஆட்டோக்களில் ஒன்றில் ஏறி சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் உள்ள விட்டிற்கு வந்தேன். காலைக் கடன்கள் சுமூகமாக முடிந்தது. வீட்டினருகே 5, 6 தேனீர் கடைகள் இருப்பினும், காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அருகாமையில் இருக்கும் "ஹீரோ தேனீர் கடை"தான் எனது பிரியம். சூடான சுவையான ஒரு தேனீரை குடித்து விட்டு தற்செயலாக மாமல்லபுரம் பயணத்தைப் பற்றி விசாரிக்க நிவியை (நிவேதன்) அழைத்தேன். சற்றும் எதிர்பாராத விதமாக மட்டைப்பந்து விளையாட என்னை அழைத்தான். வரும் அழைப்புகளில் அநேகத்தை சம்மதிக்கும் நான் அதற்கும் சென்றேன்.

அங்கே என் வயதினரே அதிகம் காணப்பட்டனர் இருப்பினும் சற்று உரிமையாக பேசி எங்களை வரவேற்றவர் ஒரு நடுவயதவர். அவர் பேசிய இரண்டாவது நொடியிலேயே அவர் ஒரு மார்க்கெட்டிங்க் மானேஜர் என உணர்ந்தேன். மார்க்கெட்டிங் துறையில் அதிகமான நண்பர்கள் இருந்த போதினும் எனக்கு ஒரு இனம் புரியாத வெறுப்பு என்றே கூறலாம்... அத்துறை மீது! காரணம் பொறியியல்(Mechanical Engineering) படித்த நான் ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ செய்வதிலேயே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். எனது மேலான்மை கல்வியிலும் OPERATIONS MANAGEMENT யே எனது விருப்பப் பாடமாக எடுத்தேன். இவையல்லாது ஒரு விதமான போலி சிரிப்புகளையும், பொய்கள் பேசுவதையுமே தொழிலாக கொண்டிருந்தது இன்றைய MARKETING துறை. அவர் மீது எனக்கு எந்த வெறுப்பும் தோன்றவில்லை. உண்மையில் "அவர் பேசும் வார்த்தைகளும் சிரிக்கும் சிரிப்பும் உண்மைதானா?" என்பது தான் என் சந்தேகம்! எப்படியோ என் சட்டைக் கிழிந்து மட்டைப் பந்து விளையாட்டையும் முடித்துவிட்டு வீடு திரும்பினோம் நானும், நிவியும். அதற்கு முன் தினம் வீட்டில் எனது அண்ணனும் அவனது அலுவலகத் தோழர்களும் "பார்ட்டி"த்து இருந்ததை உணர்ந்த நாங்கள் மிச்சமிருந்த 4 சிக்கன்களை வெகு லாவகமாக உண்டபின்பு கிளம்பினோம், எங்களுடன் சேர்ந்த கொண்ட சந்துருவுடன். தியாகராய நகர் என்னும் T.Nagar ல் சுமார் ஒரு மணி நேர காத்திருத்தலிற்கு பிறகு ஒரு 599 கிடைத்தது. வழியில் ஒன்றையும் கவனியாமல் நானும் நிவியும் உறங்கினோம். உண்மையில் சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தம் வருமுன்பே உறங்கி விட்டோம். பின்பு அடையாறு பாலம் அருகே விழப் போன நிவியை தன்னிசையாகப் பிடித்தேன். அவனும் சற்று நேரத்திற்கெல்லாம் மடியில் தலை வைத்து உறங்கினான். மாமல்லபுரம் பேருந்து நிலையத்திலேயே விழித்தோம். ஆளுக்கொரு தேனீர் குடித்து துயில் முறித்தோம். உண்மையில் முறிக்க முயன்றோம். முடியவில்லை. எப்போதும் போல் சிற்பங்களை கண்டவுடன் சந்துருவிற்கு அதை விவரிக்கத் தொடங்கினேன். அந்தக் காட்சிகளின் புரானங்களையும் அச்சிலைகளின் இதிகாசங்களையும் விவரித்துக் கொண்டு வந்தேன். தலைவர் "கல்கி" அவர்களின் "சிவகாமியின் சபதம்" பெரிதும் உதவியது. பாதையை விட்டு பாறையில் ஏறுவதையே குறிக்கோளாக கொண்டிருந்த நாங்கள் வெவ்வேறு சாகசப் பாதைகளை தேர்ந்தேடுத்து பயணப்பட்டோம். இரண்டு புட்டி மோர் அருந்தினோம், மாங்காய்களும் நெல்லிக்காய்களும் ஊடே உருட்டிவிட்டோம், வயிற்றுப்பானையின் உள். சந்துருவின் கடும் எதிர்ப்புகளையும் தாண்டி ஒரு 50 அடி சரிவை ஏறுவது என முடிவெடுத்தோம். அவ்வாறு நான் முடிவெடுக்க என்னைத் தூண்டியது அதன் நடுவே இருந்த ஒரு மரம்தான். எப்படியும் அது எங்களுக்கு உதவும் என்பதால் ஏறத் தொடங்கி விட்டோம்.


 பாதி வழியில் எங்கள் கையில் இருந்த பிலாஸ்டிக் புட்டிகளை தவறவிட்டோம். எங்கள் வயிற்றுப்பானைகளை பிடித்துக்கொண்டு மேலே ஏறுவதே பெரும் பாடாக இருந்தது. சுவற்றில் பல்லிகளைப் போல் ஒட்டிக் கொண்டுதான் ஏறினோம். நடுவில் இருந்த ஒரு சிறு துவாரத்தில் இருக்கும் போது புகைப்படம் எடுத்துக் கொண்டோம். வெகு அண்மையில் கூடிய 10 கிலோவின் பாரம் வெகுவாக தெரிந்தது. மேலே ஏறுவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. ஒருவாறு ஏறியபின்பு நாங்கள் செய்த சாகசத்தைக் கண்டு நாங்களே எங்களை வியந்தும் பாராட்டிக் கொண்டும் இருந்தோம். அப்போது எங்களை செருப்பால் அடிப்பதை போல் ஒரு ஆடு அந்த பாறையை வெகு விரைவாக ஏறியது. சுமார் 15 நிமிடங்களாக நாங்கள் ஏறினோம். வெறும் 15 வினாடிகளில் அதை ஏறி எங்களை அசிங்கப் படுத்தியது அந்த ஆடு!





பிறகு கடற்கரை வாசம், துப்பாக்கி சுடுதல், பல நொறுவைகள், இட்லிகள், முட்டைகள், மிட்டாய்கள் என நாளை முடிக்க ஆயத்தமானோம். கடைசியாக ஒரு தேனீருடன் மாமல்லபுர பயணம் முடிந்தது. 

(எல்லாம் சரி, மாமல்லபுரத்திற்கும் புத்தனுக்கும் என்ன சம்பந்தம்? இந்த தலைப்பிற்கும், இக்கிறுக்கல்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..? அப்படி ஏதாவது தென்பட்டால் தயவு கூர்ந்து எனக்கு கூறுங்கள். ஏனெனில் எனக்கும் தெரியவில்லை! :-P )

No comments:

Post a Comment

Thank you for your feedback. I value it!